Fact Check
எச்.ராஜா பாஜகவிலிருந்து விலக வேண்டும் என்று எல்.முருகன் கூறியதாக வதந்தி
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் எச்.ராஜா பாஜகவிலிருந்து விலகாதவரை தமிழகத்தில் தாமரை மலர்வது கடினம் என்று கூறியதாக செய்தி ஒன்று சமூக வலைத் தளங்களில் உலவி வருகிறது.

Fact Check/Verification
பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளராக இருப்பவர் திரு.எச்.ராஜா. உண்மைக்குப் புறம்பானத் தகவல்களை கூறி தேவையில்லாத சர்ச்சைகளில் அடிக்கடி சிக்குவது இவர் வழக்கம்.
அண்மையில் கூட இந்திய முன்னாள் துணை முதல்வர் தேவிலால் அவர்கள் தமிழகத்திற்கு வந்தப்போது அவரது உரையை கனிமொழி அவர்கள் மொழிப்பெயர்த்தார் என்று கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.
எச்.ராஜா அவர்கள் கூறிய இத்தகவல் முற்றிலும் பொய்யானது என்பதை நியூஸ்செக்கர்சார்பில் நிரூபித்திருந்தோம். அக்கட்டுரையைப் படிக்க: https://tamil.newschecker.in/fact-checks/did-kanimozhi-translate-devilals-speech/
இந்நிலையில், “எச்.ராஜா அவர்கள் பாஜகவில் இருக்கும்வரை தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைப்பது கடினம் என்று எல்.முருகன் அவர்கள் கூறினார்” என்று புதிய தலைமுறையில் செய்தி வந்ததாக சமூக வலைத் தளங்களில் புகைப்படம் ஒன்று பரவி வருகிறது.

இச்செய்தியின் உண்மைத் தன்மைக் குறித்து அறிய நியூஸ் செக்கர் சார்பில் இதை ஆராய முடிவெடுத்தோம்.
உண்மை என்ன?
சமூக வலைத் தளங்களில் பரப்பப்படும் புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய கூகுளில் இச்செய்தியை ஆராய்ந்தோம். அப்போது நமக்கு இவ்வாறு ஒரு நிகழ்வு நடந்ததற்கான எந்த தகவலும் கிடைக்கவில்லை.
எச்.ராஜா அவர்கள் தமிழக பாஜகவில் முக்கியமான நபராவார். அவரைக் குறித்து தமிழக பாஜகவின் தலைவர் இவ்வாறு ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தால், அது மிகப்பெரிய சர்ச்சையாக மாறி, இந்திய அளவில் பெரும் பேசுப்பொருளாக மாறி இருக்கும். ஆனால் நம் தேடலில் இதுகுறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
இது எங்களுக்கு மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதனால் வைரலாகும் இமேஜை ரிவர்ஸ் சர்ச்ட் முறையில் ஆராய்ந்தோம். அதன்பின் இதனுள் இருக்கும் உண்மையை எங்களால் அறிய முடிந்தது.
கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி பாஜகட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக கல்வியாளர்கள் பிரிவின் மாவட்ட நிர்வாகிகளின் அறிமுகக் கூட்டம் நடைப்பெற்றது. அதில் கலந்துப் பேசிய எல்.முருகன் அவர்கள்,
“வரும் காலம் பா.ஜ., கட்சியின் காலம். இது வெகு தூரத்தில் இல்லை. நாம் சட்டசபையில் அமர்வது நிச்சயம். நமது எம்.எல்.ஏ.,க்கள் கோட்டையை அலங்கரிப்பார்கள்.”
என்று பேசி இருந்தார்.
இச்செய்தியை புதிய தலைமுறை செய்தியாக வெளியிட்டிருந்தது.
இச்செய்தியையே எடிட் செய்து ‘எச்.ராஜா பாஜகவிலிருந்து விலகாதவரை தமிழகத்தில் தமிழகத்தில் தாமரை மலர்வது மிகக்கடினம்’ என்று எல்.முருகன் அவர்கள் கூறியதாக பொய்யானச் செய்தி சமூக வலைத் தளங்களில் பரப்பப்படுகிறது என்பதை நம்மால் அறிய முடிந்தது.
புதிய தலைமுறையில் வந்த உண்மையான செய்தியையும், எடிட் செய்யப்பட்ட செய்தியையும் வாசகர்களின் புரிதலுக்காக கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

உண்மையானச் செய்தி. 
எடிட் செய்யப்பட்டப் படம்.
Conclusion
நம் விரிவான ஆய்வுக்குப்பின் எச்.ராஜா பாஜவிலிருந்து விலக வேண்டும் என்று எல்.முருகன் கூறியதாகவும் அச்செய்தி புதிய தலைமுறையில் வந்ததாகவும் பரப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது என்று தெளிவாகியுள்ளது.
Result: False
Our Sources
Facebook Profile: https://www.facebook.com/photo?fbid=174927814155671&set=a.103200951328358
Puthiya Thalaimurai Twitter Profile: https://twitter.com/PTTVOnlineNews/status/1299636033949036544
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)